20000 மெ.டன் பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற கிளை

20000 மெ.டன் பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற கிளை
20000 மெ.டன் பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற கிளை

பொது விநியோகத் திட்டத்திற்காக 20,000 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் பாமாயில் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பாக 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பல வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வழங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள திறன், உள்கட்டமைப்பு, அனுபவம், ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளது.

இதன்படி 2021 பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநர் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முந்தைய நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது 2021 ஏப்ரல் 26-ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5ஆம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயிலுக்கான டெண்டர் அறிவிப்பும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல், தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முந்தைய நிபந்தனைகள் படி, ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனத்தின் கடைசி 3 ஆண்டு வருமானம் 71 கோடியாக இருக்கவேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ஆண்டு வருமானம் இருந்தால் போதும் என்று உள்ளது. மேலும் டெண்டர் அறிவிப்பாணையில் 14 விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவை முறையாக பின்பற்றப்படவில்லை. அதேபோல ஏலம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் இந்த டெண்டர் அவசர அவசரமாக 6 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக 20,000 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயிலுக்காக வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும். மேலும் அதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்துசெய்து, முந்தைய நிபந்தனைகளின்படி புதிய அறிவிப்பு வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், "அரசு தற்போது வெளியிட்டுள்ள பாமாயில் மற்றும் பருப்பு வகைக்கான டெண்டரில் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என முறையிட்டார்.

அரசு தரப்பில், "2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை கொடுப்பதற்காக அரசு டெண்டர் விட்டுள்ளது. இந்த டெண்டரில் பல்வேறு மாற்றங்களையும் அரசு செய்துள்ளது. மேலும் குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாகவே, அவசரகால டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தடை விதிக்கக்கூடாது" என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட நீதிபதி அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை தமிழக அரசின் பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com