110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினீர்களா? - திமுக, அதிமுக காரசார விவாதம்

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினீர்களா? - திமுக, அதிமுக காரசார விவாதம்
110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினீர்களா? - திமுக, அதிமுக காரசார விவாதம்

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து சட்டசபையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.

இன்றைய சட்டசபை கூட்டத்தில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா என கேட்கிறீர்கள். இந்த அவையிலேயே 110 விதியின் கீழ் அம்மையார் ஜெயலலிதா படித்ததை எல்லாம் நீங்கள் செய்தீர்களா என நாங்கள் திருப்பி கேட்டால் உங்களால் பதிலளிக்க முடியாது" எனக் கூறினார்.



அப்போது பேசிய எதிர்க்கட்சிக் கொறடா வேலுமணி, புள்ளி விவரமாக என்னென்ன செய்தோம் என்பதை சொல்லி இருக்கின்றோம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "வெளியே கொடுத்த வாக்குறுதியை கேட்டீர்களே, இங்கு 110 விதியில் கொடுக்கும் வாக்குறுதியை செய்யவில்லையென்றால் அது 'Breach of Trust' , அதனைப் பற்றி நாளை விவாதம் வைத்துக் கொள்ளலாமா, எத்தனை நிறைவேற்றினார்கள் என விவாதிக்கலாம்" என்றார்.

அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "2016 தேர்தலில் தமிழ்நாட்டில் படித்த 50 ஆயிரம் இளைஞர்களுக்கு 'Youth Brigade' என்ற திட்டத்தின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறினார்கள், அவ்வாறு பணியமர்த்தப்பட்டவர்களின் பட்டியலை கொடுங்கள்" என்றார்.

இதற்கு பதிலளித்த அதிமுக கொறடா வேலுமணி, "110 விதியில் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம், 90% நிறைவேற்றப்பட்டுள்ளது.  நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில அறிவிப்புகள் நிறைவேற்ற முடியாமல் போனது, மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளைத் தான் உறுப்பினர் கேள்வியாக கேட்டார்" என தெரிவித்தார்.

அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "2011ல் அதிமுகவின் முக்கிய வாக்குறுதியே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் தருவோம் என்று சொன்னீர்கள், சென்னையில் 10 பேருக்கு கொடுத்தீர்கள். தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டதா?" என கேள்வி எழுப்பினார்.



அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "போன ஆகஸ்ட் மாதம் இது தொடர்பான அறிக்கையை இதே அவையில் நான் சமர்ப்பித்துள்ளேன். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட எத்தனை அறிவிப்புகளுக்கு அரசாணை போடப்பட்டுள்ளது,  எத்தனை திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. அது  அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை,  அது சரியில்லை என்றால் என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதை நாளை இந்த அவையில் வைக்கின்றோம். விவாதிக்கலாமா?" என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "நாங்கள் செய்தோமா என நீங்கள் கேட்க, நீங்கள் செய்தீர்களா என்று நாங்கள் கேட்க, வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ரெண்டு பேருமே செய்யவில்லையோ என யோசிப்பார்கள்" என கேட்டதால் அவையில் சிரிப்பலை நிலவியது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com