வங்கியில் ரூ. 100 கோடி கடன் வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக ஹரிநாடார் மீது புகார்

வங்கியில் ரூ. 100 கோடி கடன் வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக ஹரிநாடார் மீது புகார்
வங்கியில் ரூ. 100 கோடி கடன் வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக ஹரிநாடார்  மீது புகார்

வங்கியில் ரூ.100 கோடி கடன் வாங்கித்தருவதாக ஹரிநாடார் மோசடி செய்து விட்டதாக இரண்டு தொழிலதிபர்கள் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரிநாடார். இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை பெங்களூர் போலீசார் கடந்த மே மாதம் கைதுசெய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இஸ்மாயில் சக்ராத் மற்றும் பஷீர் ஆகிய இருவரும், ரூ.100 கோடி வங்கிக்கடன் வாங்கி தருவதாக ரூ. 1.5 கோடி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாக ஹரி நாடார் மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கததால் இன்று வேப்பேரியில் உள்ள சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தொழில் அதிபர் பஷீர் தனது வழக்கறிஞர்களுடன் புகார் கொடுக்க வந்தார்.

ஆனால், கொரோனா காலம் என்பதால் காவல் ஆணையரை சந்தித்து புகார் கொடுக்க இயலாது, ஆன்லைனில் கொடுக்கும்படி பாதுகாப்பு பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர். பிறகு ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்த குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய இருவரும் இணைந்து குஜராத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது தொழில் பெரும் நஷ்டம் அடைந்தது. அதனை சரி செய்வதற்காக வங்கியில் ரூபாய் 100 கோடி கடனாகப் பெற முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோரின் மூலம் தொழிலதிபர்களின் விவரங்களை அறிந்த ஹரிநாடார் இரண்டு தொழிலதிபர்களையும் தொடர்பு கொண்டு தான், கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட் (CAPITAL UP Investments) என்ற கம்பெனியின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி எனவும் இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனை நம்பிய தொழிலதிபர் இருவரையும் ஹரிநாடார் சென்னை தி.நகர் வரவழைத்து ரூபாய் 100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் தான் பெற்றுத் தருவதாகவும் இதற்கு 2 சதவீத கமிஷன் தனக்கு தர வேண்டுமெனவும் ஹரி நாடார் கூறியதாகவும், இதனையடுத்து, மூன்று தவணைகளாக ரூபாய் 1.5 கோடி பணத்தை அவருக்கு தொழிலதிபர்கள் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. பின்னர் வங்கி கடன் குறித்து கேட்டபோதெல்லாம் தற்போது தான் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் தேர்தல் முடிந்து உடன் வங்கி கடன் உடனடியாக பெற்றுத் தருவதாக கூறி அவர்களை அலைக்கழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கி கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரிநாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என தொழிலதிபர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு ஏதேதோ காரணம் சொல்லி ஹரிநாடார் சமாளித்ததாகவும், திருநெல்வேலி வருமாறு இரண்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சென்ற தொழிலதிபர்கள் தங்களுக்கு கடன் வேண்டாம் எனவும் தாங்கள் செலுத்திய ரூபாய் ஒன்றரை கோடி பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு ஹரிநாடார் தான் விரைவிலேயே அந்த பணத்தை தருவதாக கூறி, அதன் பின் அவர்களின் மொபைல் போனை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தொழிலதிபர்கள் இருவரும் தாங்கள் ஹரி நாடாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் மாம்பலம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். விசாரணை செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட பணம் ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தொழிலதிபர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் தற்போது புகார் கொடுத்துள்ளனர். ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தங்களிடமிருந்து ஹரிநாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடி பணத்தை மீட்டுத் தருமாறும் புகார் அளித்தனர். ஏற்கெனவே வங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டு தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார் மீது தொழிலதிபர்கள் இருவர் புகாரளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஆர்.சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com