குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னையில் மேலும் 2 அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் உள்ள ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் செந்தில்வேலவனின் இல்லத்திலும், ஓய்வு பெற்ற கலால் நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் ஸ்ரீதரின் இல்லத்திலும், குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, குட்கா ஆலை உரிமையாளர் மாதவ்ராவின் கிடங்கு மற்றும் பிற அதிகாரிகளின் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. குட்கா ஊழல் விவகாரத்தில் மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மத்திய அரசு அதிகாரிகள் இருவரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரின் நீதிமன்றக் காவலை, அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.