குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக, குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் 10 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, குட்கா ஊழல் விவகாரம் வெளிவரக் காரணமாக அமைந்தது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. 3 மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ, முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி மாதவராவுக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி சிபிஐ அலுவகத்தில் ஆஜரான குட்கா நிறுவன உரிமையாளரிடம் 10 மணி நேரம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிறகும் குட்கா விற்பனை நடந்தது எப்படி என்றும், எங்கிருந்து குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட்டன என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குட்கா விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் குறித்தும் விசாரணையின்போது அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. மாதவராரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளது.