கொரோனா பாதிப்பை பொறுத்து பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் - அமைச்சர் மகேஷ்
செய்தியாளர்: பிருந்தா
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது....
சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஏற்கனவே இது தொடர்பாக தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். தற்போது பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வழங்கப்படும். கொரோனா பாதிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறையும் சுகாதாரத் துறை வாயிலாக தீவிரமாக கண்காணித்து வருகிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.