மதுரை: கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய மயான ஊழியர்கள்
மதுரையில் மயான ஊழியர்கள், கொரோனா நிவாரண நிதியாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மதுரையில் கொரோனோ பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்தாலும் கடந்த ஒரு மாதமாக பாதிப்பும், உயிரிழப்பும் அதிக அளவிலேயே நீடிக்கிறது. நாள்தோறும் கொரோனாவால் இறந்த 20க்கும் அதிகமானோர் உட்பட 70க்கும் அதிக உடல்களை தகனம் செய்யும் பணியில் உள்ளனர் மூலக்கரை நகராட்சி மயான ஊழியர்கள்.
இங்கு தகன மேடையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது பற்றி ஆட்சியர் அனிஷ் சேகரும், மாநகராட்சி ஆணையர் விசாகனும் ஆய்வு செய்தபோது, தகனமேடையில் பணியாற்றும் 12 ஊழியர்களின் ஒருநாள் ஊதியமான 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.
இப்போதுமட்டுமல்ல, கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் தங்களது ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள் மூலக்கரை நகராட்சி மயான ஊழியர்கள். மரண மேடைகளிலும் மானுடம் செழிக்கிறது என்பதற்கு முன் உதாரணமாக உள்ள இவர்கள் பாரட்டுக்குரியவர்களே.