7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்
பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் (MDMA) இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதால் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை முடிவெடுப்பதில் தாமதமாவதாக ஆளுநர் செயலாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இதையடுத்து தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியிருந்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் (MDMA) இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதால் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை முடிவெடுப்பதில் தாமதமாவதாக ஆளுநரின் செயலாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதில் தெரிவித்தது.
பேரறிவாளன் பரோல் மனுவை உரிய நேரத்தில் பரிசீலிக்காததால் சிறைத்துறைக்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 3 ஒத்தி வைத்தனர்.

