நீட் விலக்கு மசோதா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் கொடுத்த உறுதி... என்ன தெரியுமா?
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்திருக்கிறார்.
பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் மற்ற சட்டமுன்வடிவுகள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வலியுறுத்தியிருந்தார். இந்த சந்திப்பு, சென்னை கிண்டியில் நடந்தது. இந்த சந்திப்பின் முடிவில், நீட் விலக்கு கோரும் மசோதாவை உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தியதாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த சந்திப்பில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி உறுதியளித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருக்கும் தகவலின்படி, `நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 142 நாள்களுக்குப் பிறகு, அது ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.
அதன்பின்னர் தமிழக சட்டமன்ற வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில், இந்த சட்ட முன்முடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 2021-22ம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-23ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நீலையில், `நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்முடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும் இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் மற்ற சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், அதன்மூலம் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வை மதிப்பதாகவும் அமைந்திடும் என்றும் ஆளுநரிடம் முதல்வர் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார். இச்சந்திப்பின் இறுதியில், ஆளுநர் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக முதல்வரிடம் உறுதியளித்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.