ஆளுநர் ரவி அரசியல் சட்டத்திற்கும் சட்ட விதிகளுக்கும் புறம்பாக பேசி வருகிறார் - வைகோ

ஆளுநர் ரவி அரசியல் சட்டத்திற்கும் சட்ட விதிகளுக்கும் புறம்பாக பேசி வருகிறார் - வைகோ
ஆளுநர் ரவி அரசியல் சட்டத்திற்கும் சட்ட விதிகளுக்கும் புறம்பாக பேசி வருகிறார் - வைகோ

ஆளுநர் ஆர்என்.ரவி அரசியல் சட்டத்திற்கு புறம்பாகவும் அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் ஒவ்வொரு நாளும் பேசி வருகிறார் என வைகோ குற்றம் சாட்டினார்.

மதுரையிலிருந்து சென்னை செல்ல வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்...

எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. இப்போது நடைபெற இருக்கின்ற ஈரோடு இடைத் தேர்தலிலும் திமுக கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்ற காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில் திராவிட இயக்க பூமியில் பாஜக முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது.

அவர்கள் கோடிக்கணக்கிலே பணம் செலவழிக்கலாம் ஒவ்வொரு ஊரிலும் பணம் கொடுத்து கொடியேற்றச் செய்யலாம். பணம் கொடுத்து ஒரு கிளையை அமைக்க பார்க்கலாம். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது இந்த மண்ணிலே திராவிட இயக்க உணர்வுகள் லட்சியங்கள் கொள்கைகள் ஆழப் பதிந்தவை. அதற்காக பி.எம்.நாயரும், நடேசன், தியாகராயரும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் அவர்களும் இன்று வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் என்னுடைய ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு தமிழகம் பண்படுத்தப்பட்டிருக்கிறது இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியை நாளும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி, வீடு தேடி மக்களுக்கு மருத்துவம் வரும் என்று சொல்லக்கூடிய வகையிலே ஒவ்வொரு திட்டத்தையும் புதுமையாக இதுவரை வேறு மாநிலங்களில் முயற்சிக்காத திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. ஆகவே இந்த அரசு மக்கள் செல்வாக்கை நாளுக்கு நாள் அதிகம் பெற்று வருகிறது என்பதுதான் நடைமுறை உண்மையாகும் என்றவரிடம்...

தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழக அரசின் எதிரான நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. குப்தா அவர்கள் மசோதா கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் பேசிய நான் சொன்னேன், ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று, ஆச்சாரியா அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது சொன்னார் அரசியலில் ஓய்ந்து போய் தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த ஆளுநர் மாளிகைகள் உருவாக்கப்பட்டன. இதை ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள்.

ஆகவே தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிற ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக, அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லிவிட்டு இப்போது அதை எப்படியாவது மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார். அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக புரிகின்றது.

ஒ.பி.எஸ் பாஜக ஆதரவு என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்... ஈரோடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்பதை நான் தெரிவித்து விட்டேன் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com