“அரசு எங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்” - பழையார் மீனவர்கள் கோரிக்கை
அரசு தங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவேண்டும் என பழையார் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நேற்று முன்தினம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அப்பெண் வசித்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. அத்துடன் பழையார் துறைமுகத்தில் இருந்து கொடியம்பாளையம் தீவு செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு துறைமுகம் சீல் வைக்கப்பட்டது.
இதனால் கடந்த 10 நாட்களாக அரசின் விதிமுறைபடி மீன்பிடித்து வந்த பழையாறு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஊரடங்கால் வேலை வாய்பை இழந்த மீனவர்கள் சிறு தொழில்களுக்கு சென்று வந்த நிலையில் பிடிக்கப்படும் மீன்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். தற்போது மீண்டும் பழையார் துறைமுகம் சீல்வைக்கப்பட்டதால் 10 ஆயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் 2500 படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தபட்டுள்ளது. தொடர்ந்து வேலை வாய்ப்பை இழந்து பாதிக்கபட்டு வரும் தங்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பழையார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.