அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருபானந்தம் என்பவர் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான முரளிதரன் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதை திருப்பிக் கேட்டபோது சாதியைச் சொல்லி கிருபானந்தத்தை திட்டிய முரளிதரன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கிருபானந்தம் கடந்த 8ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் முரளிதரன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.