“வானத்தில் இருந்து கடலை பார்த்தோம்” - நிஜமான ஏழை மாணவர்களின் கனவு
வாழ்நாளில் விமானத்தை நேரில் காண்பதையே கனவாக கொண்டிருந்த சிவகாசியை சேர்ந்த பள்ளி மாணவர்களை தன்னார்வ அமைப்பு ஒன்று விமான பயணம் அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும்பாலோரின் ஆசை. குழந்தைகளுக்கு அது கனவு என்றே சொல்லலாம். சிவகாசியில் உள்ள ரத்தினவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்களின் அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது தன்னார்வ அமைப்பு. விமானத்தில் பறந்து கொண்டே பைலட்கள் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதியை பார்த்தது வாழ்நாளில் மிக சந்தோஷமான தருணம் என்கின்றனர் மாணவர்கள்.
ரவுண்ட் டேபிள் இந்தியா என்னும் தன்னார்வ அமைப்பு பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட 22 மாணவர்களை தேடி கண்டறிந்து அவர்களுக்கு இந்தச் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். மதுரையில் இருந்து விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட மாணவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கும் அழைத்து செல்லப்பட்டனர்.
விமானத்தில் பறந்தது கனவு மாதிரி இருந்தது என்றும், விமானத்தில் இருந்து கடல், கப்பலை பார்த்தோம் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்