அரசுப் பள்ளியை சோலையாக மாற்றிய மாணவர்கள் - குவியும் பாராட்டுக்கள்
தருமபுரி அருகே உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியை சோலைவனமாக மாற்றியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் இண்டூரை அடுத்த பாலவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 9 ஆசிரியர்களும், 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுக் கொடுத்துள்ளனர். படிப்பில் மட்டுமல்ல, ஒழுக்கத்திலும் சிறப்பாக அவர்கள் திகழ்கின்றனர்.
சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பள்ளி மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அலங்கரித்துள்ளனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கரனின் தூண்டுகோலால், பள்ளி வளாகத்தைச் சுற்றி அரசமரம், புங்கமரம், வேப்பமரம் மற்றும் தேக்கு உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட நாற்றுகளை வளர்த்து அதை வளாகத்திலேயே நட்டு பராமரிக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் ஒரு அறிவியல் அறிஞரின் பெயரைக் குறிப்பிட்டு வித்தியாசமான முறையில் கல்வியை அணுகுகின்றனர். மாணவர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.