”பிற மாவட்டங்களில் கொரோனா பரவ தமிழக அரசே காரணம்” - எல். முருகன் குற்றசாட்டு
இந்தியாவில் தடுப்பூசியை கொண்டு வரும்போது விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என விமர்சனம் செய்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பாஜக மாநிலத்தலைவர் எல் முருகன் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக பாஜக சார்பில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். பாஜக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக உஜ்வாலா திட்டம், கிசான் சம்மான் நிதித் திட்டம் போன்ற உன்னதமான பல திட்டங்கள் விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
துறைமுகம் தொகுதியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு ” அங்குள்ள மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து திமுக அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பிய போது, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர் சேகர்பாபு பேசியது தவறு, ஓட்டுப் போட்டவர்கள் போடாதவர்கள் என அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்.” என்றார்
பிற மாவட்டங்களில் கொரோனா பரவ தமிழக அரசே காரணம்
மேலும் பேசிய அவர், “சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிறமாவட்டங்களில் பரவிய கொரோனா பரவலுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே காரணம். ஒரே நாளில் அனைத்து கடைகளையும் திறந்து,மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி சென்னையில் பரவியிருந்த நோய் தொற்றினை பிற மாவட்டங்களிலும் பரவ வழி வகுத்து விட்டனர்.
மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை, ஆனாலும் மத்திய அரசு மாநில அரசுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொண்டு வரப்படும் போது அதனை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என விமர்சனம் செய்கிறார்கள்.
சென்னை பிஎஸ்பிபி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது.” என்றார்.