சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், 2021 - 22 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஏற்கனவே 50 % விடுவிக்கப்படிருந்த நிலையில் எஞ்சிய 50% தொகையையும் விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கள் தொகுதியில் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டின் இறுதி காலாண்டு என்பதால் பணிகளை விரைந்து முடிக்க தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியாக ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா, இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.