மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற சிறுவனை, ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு , தள்ளுவண்டி வசதி மறுக்கப்பட்டதாக கூறி அவரின் தந்தை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் நஸ்ருதீன். இவருடைய மகன் அல் அமான் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கடந்த 9ஆம் தேதி இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 13 வயது சிறுவனான அல் அமானை ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் செல்ல அவரின் தந்தை தள்ளுவண்டி கோரியுள்ளார். உடனடியாக தள்ளுவண்டி தர மறுக்கப்பட்டதாகக்கூறி, அரசு மருத்துவமனை முன் உள்ள சாலையில் நஸ்ருதீன் தன்னுடைய மகனை மடியில் வைத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டார்.
மேலும், ஸ்கேன் மையம் காலை 7.30 மணிக்கு திறந்திருக்கும் ஆனால், நஸ்ருதீன் காலை 5 மணிக்கே தள்ளுவண்டி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மருதுபாண்டியன் கூறியுள்ளார். பின்னர், ஸ்கேன் மையத்திற்குச் செல்ல தள்ளுவண்டி வசதி செய்து கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.