சினிமாவை மிஞ்சும் வகையில் தனியார் வேனை சேஸிங் செய்த அரசு பஸ்: திருவாரூரில் நடந்தது என்ன?
அரசு பேருந்தை விரட்டிச் சென்று அடித்து நொறுக்கிய வேன் ஓட்டுனர். பொங்கி எழுந்த அரசு பேருந்து ஓட்டுனர், பயணிகளோடு வேனை துரத்திச் சென்ற பரபரப்பு சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.
திருவாரூரிலிருந்து நாகூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு பேருந்து காரையூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் சென்ற வேன், பேருந்து மீது லேசாக உரசியது. இதில் வேனின் சைடு கண்ணாடி உடைந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வேன் ஓட்டுனர், அரசு பேருந்தை துரத்திச் சென்று சாக்கில் வைத்திருந்த கட்டையால் அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை அடித்து உடைத்தனர். பிறகு அந்த வேன் நாகூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது
இதையடுத்து அந்த வேனை, அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளோடு துரத்திச் சென்றார். இதைக்கண்ட வேன் ஓட்டுநர் வேனை வேகமாக ஓட்டினார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னே சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் மோதியது.
இதைத் தொடர்ந்து இறங்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் வேனில் இருந்தவர்களை பிடித்து, வைப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வேனில் வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இவர்கள், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததற்காக வழங்க வேண்டிய உரிய தொகையை அவர்கள் தர ஒப்புக் கொண்டதால் காவல் துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அரசு பேருந்தை தாக்கியதால் கோபமுற்ற பேருந்து ஓட்டுனர், பயணிகளோடு வேனை துரத்திச் சென்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது
இதையும் வாசிக்கலாம்: மதுரை: நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிழச்சியில் 10 பவுன் நகை திருட்டு