“ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்” - கோமதி மாரிமுத்து உருக்கம்
தன்னால் முடியும் என்று ஓடியதால் இலக்கை அடைந்ததாக தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோமதி மாரிமுத்து, “2012 ஆம் ஆண்டுதான் எனக்கு ஒலிம்பிக் என்றால் என்னவென்றே தெரியும். 2010 ஆம் ஆண்டில் நான் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றுதான் முயற்சித்து வந்தேன். 2016 ஆம் ஆண்டில் எனது தந்தை இறந்துவிட்டார். அப்போது எனக்கு உதவ யாரும் இல்லை. உறவினர் அக்காதான் ‘உன்னால் முடியும். நீ நம்பிக்கையோடு பயிற்சி செய்’ என கூறினார். 2016 ல் அப்பா இறந்த ஒரு மாதத்தில் எனது பயிற்ச்சியாளரும் இறந்துவிட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.
தொடர்ந்து மற்றொரு பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றேன். பின்னர்தான் என்னால் முடியும் என்று ஓடினேன். இலக்கை அடைந்தேன். அதுபோல் நீங்களும் இலக்கை நோக்கி பயணித்தால் கண்டிப்பாக வெற்றியடைவீர்கள். அதற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.