நீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் - திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்!

நீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் - திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்!
நீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் - திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்!

நகைகளை கொள்ளை அடிப்பதற்காக தீட்டப்பட்ட திட்டம் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மென்மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன.‌

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இங்கு கொள்ளை அரங்கேறிய விதம்தான் திடுக்கிட வைக்கின்றது. நேற்று முன்தினம் கடையின் பாதுகாப்புக்காக இரவு 6 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கடையின் முன்பக்கம் நின்று விடுவதே வழக்கம். பின் பக்கத்தில் சென்று பார்ப்பதற்கான தேவை கடந்த காலங்களில் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடையை ஒட்டி இருக்கும் பள்ளியின் வழியாக வந்து, கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லரி கட்டடத்தின் பின்புற பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர்.

காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பள்ளியில் பகலிலும், இரவிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அதே நேரத்தில் பள்ளி வளாகத்தில் அந்நியர்கள் யாரும் நுழைய முடியாத வகையில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் காவலுக்கு இருப்பது வழக்கம். உள்ளே அத்துமீறி நுழைபவர்களை நாய்கள் விரட்டியடித்து விடும். ஆனால் இரவு தொடங்கி அதிகாலை வரை லேசாக மழை பெய்ததால் நாய்கள் அனைத்தும் பள்ளி கட்டடத்திற்குள் சென்றுவிட்டன. அந்த நேரத்தை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர். நீண்ட நாட்களாக நோட்டமிட்ட கும்பல் தான் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து இருக்கிறது என காவல்துறையினர் கணித்துள்ளனர்.

திருடிய நகைகளை பைகளில் நிரப்பிக் கொண்டு, அந்த பைகளை கயிற்றில் கட்டி இழுத்து வெளியே கடத்தி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. யாரேனும் அந்தப்பகுதியில் வருகிறார்களா, என்பதை கவனித்து, கயிறு மூலமாகவே சிக்னல் அனுப்பியுள்ளனர். பேசினால் மாட்டிக் கொள்வோம் என்பதால், கயிரையே தங்களது சைகைக்கு பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.

உள்ளே வருவதற்கும், நகைகளை கொள்ளையடித்தபின் அங்கிருந்து வெளியே செல்வதற்கும் பிரதான சாலையை கொள்ளையர்கள் பயன்படுத்தவில்லை. எனவே அவர்கள் எந்த பாதை வழியாக உள்ளே நுழைந்தார்கள், எந்த பாதை வழியாக வெளியேறினார்கள் என்பதை கண்டறிய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com