‘இது புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம்’ எனக் கூறி ஏமாற்றிய பெண் கைது
புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம் எனக்கூறி போலி தங்கத்தை ஏமாற்றி விற்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் கணேஷ். இவரது மனைவி கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க கிருஷ்ணகிரி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி லட்சுமி (32) என்பவர் வந்துள்ளார். அவ்வப்போது இவர் கடைக்கு வந்து துணி எடுத்துக்கொண்டு இருந்ததால் கவிதாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தான் சாலை பணியாளர் என்றும் தற்போது காரமடை ரங்கா நகர் பகுதியில் வசிப்பதாகவும் கவிதாவிடம் லட்சுமி கூறியுள்ளார். இந்த நிலையில் லட்சுமி, தன்னிடம் பழங்கால தங்க கட்டிகள் உள்ளது. இவற்றை தான் சாலைப்பணிக்கு குழி வெட்டிய போது கிடைத்ததாகவும் துணிக்கடை அதிபர் கவிதாவிடம் கூறியுள்ளார்.
மேலும் இவற்றை விற்க முடியவில்லை என்றும் ஆண்களிடம் கொடுத்தால் தங்க கட்டிகளை வாங்கி கொண்டு ஏமாற்றி விடுவார்கள் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கவிதாவிடம், நீங்களே இந்தப் பழங்கால தங்கக் கட்டிகளை வாங்கி கொள்ளுங்கள் என வற்புறுத்தவே கவிதாவும், தங்கக் கட்டிகளை கொண்டு வா பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
உடனே லட்சுமி ஜார்ஜ் மன்னர் உருவம் மற்றும் தாமரை சின்னங்களை கொண்ட தங்கக் கட்டிகளை கொண்டு வந்து காட்டியுள்ளார். அதில் சிறு பகுதியை சோதித்த போது, அவை உண்மையான தங்கங்களாக இருந்துள்ளன. இதனால் ஏமாந்து போன கவிதா ரூ.4 லட்சம் என்று சொன்ன விலையை, ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். பிறகு தான் வாங்கிய தங்க கட்டிகளை முழுமையாக சோதித்தபோது அவை போலி என தெரிய வந்தது. போலி தங்கத்தை விற்ற லட்சுமி தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், காரமடை பகுதியில் இதே போல தங்கக் கட்டி இருப்பதாக ஒரு பெண்மணி கூறி விற்க முயல்வதாக தனது குடும்ப நண்பர் மூலம் கிடைத்த தகவலின் பேரில் லட்சுமி பிடிபட்டார். இதனையடுத்து லட்சுமியை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்