கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரத்தை, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. காலை அதுகுறித்த விசாரணை வந்தபோது, வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை ஒட்டி பிற்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி சம்பத் குமார் அறிவித்துள்ளார். இந்த வழக்குக்காக 106 சாட்சிகள், 500 ஆவணங்களை விசாரித்து தீர்ப்பளித்திருந்தது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் கிடந்தது. அவ்வழக்கில் சிசிடிவி ஆதாரத்துடன் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை நீதிமன்றத்தில் பின்னாள்களில் ஆஜரானர். வழக்கு விசாரணை கடந்து வந்தபாதை குறித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், “கோகுல்ராஜை மிரட்டி தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து பின்னர் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியது நிரூபணம் ஆகியுள்ளது. மலைக்கோயிலுக்கு சென்ற கோகுல்ராஜை கடத்திச்சென்று தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா, குற்றஞ்சாட்டப்பட்ட பலரை கைது செய்தார். வழக்கில் தொடர்புடைய சுவாதி பிறழ்சாட்சியம் அளித்துள்ளார். இருந்தபோதிலும் சிசிடிவி காட்சி முக்கிய ஆதாரமாக இருந்ததால் குற்றம் நிரூபணமாகியுள்ளது. விசாரணையின்போது 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 500 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை ஆகியோர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.