கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி - அரசாணை வெளியீடு
'கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என தமிழக அரசு சார்பில் கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றில், பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகளில் ஒன்றாக, மாவட்ட அளவில் ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு பணிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழந்தைகளுக்கு சொல்லப்பட்டிருந்த நிவாரண உதவிகளாக, பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்; அரசு இல்லம் மற்றும் விடுதியில் முன்னுரிமை தரப்படும்; ஒரு பெற்றோரை மட்டும் இழந்த குழந்தைக்கு, நிவாரணமாக 3 லட்சம் ரூபாய்; இரு பெற்றோரையும் இழந்து ஆதரவின்றி இருக்கும் குழந்தைக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பீடு தொகை; உறவினர் ஆதரவில் இருக்கும் குழந்தைக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெற்றோரில் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் வங்கியில் 5 லட்ச ரூபாய் வைப்பு நிதி போடப்படும் என்ற அறிவிப்பு தொடர்பான அரசாணையை, தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. அக்குழந்தை 18 வயதை நிறைவடையும்போது, அந்த தொகை வட்டியோடு அளிக்கப்படும் என முதல்வர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
இந்த நிவாரணத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த நிதித்துறை, கூடுதல் தலைமைச் செயலர் தலைமையினான 6 பேர் கொண்ட குழு வகுத்துள்ளது.

