கோவை ஆணவக்கொலை: காதலனை தொடர்ந்து காதலியும் உயிரிழப்பு
மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலி வர்ஷினி பிரியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வர்ஷினி பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தார் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இந்தச் சூழலில் பின்னர் கனகராஜ் வர்ஷினி ப்ரியாவுடன் சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனி குடும்பம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத் அவர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அந்தக் கொடூரத் தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் வர்ஷினி ப்ரியா உயிருக்கு ஆபத்தாக போராடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலையில் ஈடுபட்ட வினோத்குமார் கடந்த 26ம் தேதி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்
இந்நிலையில் 3 நாட்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்த வர்ஷினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

