நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன. இதுதவிர டிடிவி தினகரனின் அமமுக எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால், தினகரன் தங்கள் கட்சிக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்ததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குக்கர் சின்னத்தை வழங்குவதில் என்ன சிக்கல் ? என கேட்டிருந்தனர். அதற்கு தினகரன் தங்கள் கட்சியை பதிவு செய்யவில்லை என்றும், பதிவு செய்யாத சின்னத்திற்கு பொதுச் சின்னத்தை வழங்க முடியாது என்றும் பதிலளித்தனர். இதையடுத்து ‘குக்கர்’ வழங்க வேண்டும் அமமுக கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும், அமமுக ஒரே அமைப்பாக செயல்படுவதால், அதனை கட்சி போன்று கருதி பொதுச் சின்னத்தில் ஏதேனும் ஒன்றை பரிசீலித்து வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் ‘பரிசுப் பெட்டி’ என்ற சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அமமுகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னமாக இது வழங்கப்பட்டுள்ளது. இந்த் சின்னத்தை மக்களிடம் தெரிவித்து வெற்றி பெறுவோம் என அமமுக நிர்வாகியும், தேனி நாடாளுமன்ற வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.