கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கஜா புயலின் கண்பகுதி நாகை வேதாரண்யம் இடையே முழுமையாக நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரண மாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது.
கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதே போல் மின்கம்பங்க ளும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 81 ஆயிரம் பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கஜா புயல் 6 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.