கஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம்
கஜா புயலால் மின்சார சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்ட போதிலும், துரிதமான முறையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயலால் ஏறபட்டுள்ள மின்சார சேவை பாதிப்பு குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள திருவாரூரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உயர் அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். கஜா புயலால் உயர் அழுத்த மின் கம்பங்கள் நாகப்பட்டினத்தில் 3,000, புதுக்கோட்டையில் 8,913, தஞ்சாவூரில் 6,124 திருவாரூரில் 2,375, திண்டுக்கல்லில் 1,198 என மொத்தம் 84 ஆயிரத்து 736 கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. உயரழுத்த மின்கம்பிகள் 120 கி.மீ, புதுக்கோட்டையில் 125 கி.மீ, தஞ்சாவூரில் 80 கி.மீ, திருவாரூரில் 643 கி.மீ என மொத்தம் 1,152 கி.மீ அளவிற்கு அறுந்துள்ளன.
தாழ்வழுத்த மின் கம்பிகள் நாகப்பட்டினத்தில் 350 கி.மீ, புதுக்கோட்டையில் 395 கி.மீ, தஞ்சாவூரில் 120 கி.மீ, திருவாரூரில் 1,685 கி.மீ என மொத்தம் 4539 கி.மீ அளவிற்கு சேதம் அடைந்துள்ளன. மின்மாற்றிகளை பொறுத்தவரையில் நாகப்பட்டினத்தில் 180, புதுக்கோட்டையில் 345, தஞ்சாவூரில் 60 என மொத்தம் 247 மின்மாற்றிகள் புயலால் சேதமடைந்துள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 8,216 மின் பணியாளர்களும் பிற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 5,413 பணியாளர்களும் என மொத்தம் 13,619 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைக்கேற்ப மேலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.