நாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு

நாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு

நாகை, திருவாரூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு
Published on

கஜா புய‌ல் பாதித்‌த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. அதில், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தக் கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. 

இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணப்பணிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். கடந்த முறை முதலமைச்சர் மேற்கொண்ட கஜா புயல் ஆய்வுப் பயணம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாளை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து இன்று இரவு ரயில் மூலம் முதலமைச்சர் நாகப்பட்டினம்‌ புறப்படுகிறார். நாளை காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்தில் அவர் ஆய்வை தொடங்குகிறார். பிரதாப ராமபுரம், வேட்டைக்காரனிருப்பு, புஷ்பவனம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யும் முதல்வர், பிற்பகலில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார். கடந்த 20ஆம் தேதி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்தார். கடந்த முறை முதல்வர் பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த முறை சாலை மார்க்கமாக அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com