'கஜா' புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது; மிதமான மழைக்கு வாய்ப்பு
'கஜா' புயல் கரையைக் கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது என்றும் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும் ’கஜா’ புயல் உள்ளதாகவும், இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு நூறு கிலோ மீட்டரை தொடலாம் எனவும் கூறப்படுகிறது.
புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால், ஆகிய பகுதிகளில் சேதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ’கஜா’ புயல் கரையை கடக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்