கஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் - விவசாயி தற்கொலை
கஜா புயலால் கரும்பு பயிர்கள் சேதமடைந்ததால் தஞ்சையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, வாழை, நெல், மற்றும் கரும்பு பயிர்கள் கஜா புயலில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மனம் வெதும்பி தஞ்சையில் ஏற்கெனவே இரண்டு விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சோழகிரிப்பட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் கரும்பு பயிர் புயலால் சேதமடைந்ததை கண்டு வேதனையில் இருந்து வந்துள்ளார். வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்று புலம்பி வந்த இவர், நேற்று இரவு வயலிலேயே நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாமிக்கண்ணு தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.