கஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை சுவர் இடிந்து விழுந்தும், மரம் விழுந்தும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதே போன்று, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். இதே மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவரும் நடுக்குப்பத்தில் சுவர் இடிந்து விழுந்து ரெங்கநாதன் என்பவரும் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே வடமணப்பாக்கம் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வந்தவாசி அருகே வெண்குன்றத்தில் மின்னல் தாக்கி மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு பகுதியில் கூரை வீடு மீது மரம் விழுந்ததில் காசிநாதன் என்ற விவசாயி உயிரிழந்தார். பாசிக்கொட்டகையில் மோட்டார் கொட்டகை இடிந்து ரெங்கசாமி என்பவர் உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் சிவகொல்லையில் வீடு இடிந்து 4 பேர் உயிரிழந்தனர். சிவகங்கையில் சுவர் இடிந்து முத்து முருகன் என்பவர் உயிரிழந்தார். திருப்பத்தூரில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் எலிசபெத் ராணி என்பவர் உயிரிழந்தார். இதே போன்று வேதாரண்யத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கஜா புயலுக்கு 40 பேர் உயிரிழந்துள்ளதாக, தமிழக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை 21 ஆண்கள், 16 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.