சீர்காழி: டாஸ்மாக்கில் வாங்கிய மது பாட்டிலில் மிதந்த தவளை
சீர்காழி அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் தவளை ஒன்று மிதந்ததை கண்டு மதுவாங்கியவர் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் நேற்று முன்தினம் காலை திறக்கப்பட்டது. இதனால் பலர் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் ஒன்று வாங்கியுள்ளார்.
வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும்போது பாட்டிலின் உள்ளே ஏதோ கிடப்பதை பார்த்துள்ளார். அப்போது அந்த மது பாட்டிலில் தவளை ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்த ஒருவர் மூலம் இதுகுறித்து மதுபானக் கடைக்கு தகவல் தெரிந்துள்ளது.
இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
மதுபாட்டிலில் தவளை கிடந்தது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாபதியிடம் கேட்ட போது “இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை. ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும்போது பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடபட்டுள்ளது. ரம் போன்ற மது வகைகளில், நிறுவனங்களில் இருந்து வரும்போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.