தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இலவசமாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி மே 1 முதல் தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தாமாக வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என நான்கு மாநிலங்கள் அறிவித்துள்ளன.
வரும் ஒன்றாம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மருந்து நிறுவனங்களிடமிருந்து மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு அதே 150 ரூபாய்க்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்று சீரம் நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரம் மாநிலங்களுக்கு தடுப்பூசி 400 ரூபாய்க்கும், தனியாருக்கு 600 ரூபாய்க்கும் அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது சர்ச்சையான நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் அறிவித்துள்ளன.