கடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்!
சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இரண்டு நாட்கள் (10.02.2019 முதல் 11.02.2019 வரை) இலவசமாக மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்மூலம் முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களிலிருந்து இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது மெட்ரோ நிர்வாகம்.
அதனடிப்படையில் முதலாம் கட்ட வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டன. முதலாம் கட்ட வழித்தடம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், சோதனை முயற்சியாக இலவசமாக ரயில்கள் இயக்கப்படுவதாகவும் அந்நிர்வாகம் அறிவித்திருந்தது. இதே போல் கடந்த ஆண்டு சின்னமலை, தேனாம்பேட்டை போன்ற வழித்தடங்களில் இலவசமாக இயக்கப்பட்ட போது 6.41 லட்சம் மக்கள் பயணம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்பு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்திற்காக இலவச பயணத்தை மேலும் இரண்டு நாட்கள் அதிகரித்தது, மெட்ரோ நிர்வாகம். இரண்டாவது முறையாக, பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை சுமார் நான்கு நாட்கள் மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு இலவச பயண சலுகை வழங்கியது. இதனால் தொடக்க நாளான பிப்.10ஆம் தேதி அன்று சுமார் 69,000 பேரும், இரண்டாம் நாளான பிப்.11 ஆம் சுமார் 2,01,556 பேரும், மூன்றாம் நாளான பிப்.12 ஆம் தேதி சுமார் 2,10,792 பேரும், நான்காம் நாள் அதாவது கடைசி நாளான நேற்று (13.02.2019) சுமார் 2,53,031 பேரும் பயணம் செய்ததாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மெட்ரோ ரயிலில் சுமார் 7,34,379 பயணிகள் இலவச மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததிலேயே நேற்றைய தினம் மட்டும் 2,53,031 பேர் பயணம் செய்தோர் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும்.
இன்று முதல் கட்டண சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் மெட்ரோ ரயிலில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த முறையை ஒப்பிடும் போது மிகவும் அதிகம். கடந்த ஆண்டு ஐந்து நாட்கள் இலவச சேவை வழங்கப்பட்ட போது 6,41,524 பயணிகள் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.