திமுகவில் இணைந்தது ஏன்? விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விளக்கம்!
விசிக ஊடகப்பிரிவு செயலாளராக இருந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு கடந்த மே 24ம் தேதி விசிகவில் இருந்து விலகிய நிலையில், தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பனையூர்பாபு, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக விசிக தலைவர் திருமாவளவன் பல இடங்களில் முரணாக முடிவெடுப்பதாகவும், மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து கட்சியில் இருந்து வெளியே வந்தார். இந்தசூழலில் தான், இன்று திமுகவில் இணைந்திருக்கிறார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பனையூர் பாபு, தான் ஏன் திமுகவில் இணைந்திருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தாய் கழகமான திமுகவில் இன்று இணைந்திருக்கிறேன். தேர்தலில் போட்டியிட விசிகவில் வாய்ப்பு தராததால், நான் விசிகவை விட்டு விலகவில்லை. வேட்பாளர் அறிவிப்பில் இருந்து, வாக்கு எண்ணிக்கை வரை அந்தக் கட்சியிலேயே இருந்தேன். அதற்கு பின் நடந்த நிகழ்வுகளாலேயே விசிகவை விட்டு வெளியேறி இருக்கிறேன். அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கைகளை பெயரளவில் மட்டுமே தவெக வைத்திருக்கிறது. ஊடகத்தினரை சந்திக்கும் பொழுது, விஜய் மேல் சந்தேகம் இருக்கிறது என திருமா கூறியுள்ளார். தவெகவிற்கு திருமாவளவன் ஏன்? ஆதரவு அளித்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து என்னிடம் பேசவில்லை.
விசிகவிற்கும் எழுச்சி தமிழருக்கும் என் பங்கு மிக அளப்பரியது. வெளிச்சம் தொலைக்காட்சியின் உரிமையாளர் நான்தான். என்னுடைய முழு பணத்தில் தான் தொலைக்காட்சி ஆரம்பித்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வெளிச்சம் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் திருமாவளவனுக்காக தொடங்கப்பட்ட வெளிச்சம் தொலைக்காட்சி அவருக்காகவே தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

