மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதற்கான தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தமிழக அரசு இந்த அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தும் முறைக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “உள்ளாட்சித் தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை கவனித்து வருகிறோம். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய தலைமை தான் அதற்கான பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்” என்றார்.
அதேபோல், பாஜகவின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். ஜனநாயம் காப்பற்றப்பட வேண்டுமெனில் நேரடி தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
அதேபோல், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்காக அதிமுக அரசு குழப்புகிறது என்று சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.