ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று தொடக்கம்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி இன்று தொடங்குகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் செப்டம்பர் 29ஆம் தேதி அரசாணைகள் பிறப்பித்தது. அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன்படி இந்த மாத தொடக்கத்தில் சென்னை எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் அமைக்கபட்டுள்ள ஆணைய அலுவலகத்தை பார்வையிட்டு, பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் விசாரணை தொடர்பான ரகசியங்கள் வெளியில் கசிவதை தடுக்கும் நோக்குடன், ஒலி ஊடுருவாத அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்ததால், இன்று முதல் ஆணைய அலுவலகத்தில் தனது விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி தொடங்குகிறார்.