`மக்கள் ஏற்றுக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை’ - ராஜேந்திர பாலாஜி பேச்சு

`மக்கள் ஏற்றுக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை’ - ராஜேந்திர பாலாஜி பேச்சு
`மக்கள் ஏற்றுக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை’ - ராஜேந்திர பாலாஜி பேச்சு

“எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியபோது, “ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக ஆட்சியாளர்கள். மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை தருவதாக சொன்ன திமுக இதுவரை அதை வழங்கவில்லை. திமுக கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். திமுகவினர் பொய்யைச் சொல்லி வாக்கு வாங்கினார்கள்.

தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டுத்தனமாக செங்கலை காட்டி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார். திமுக ஆட்சியில் யாரும் வாழ முடியாத அளவிற்கு விலையேற்றம் உள்ளது. அரசு ஊழியர்கள், தற்போதைய முதல்வரை எதிர்க்கட்சித் தலைவராகவே இருந்திருக்கலாம் என நினைக்கின்றனர்.

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுத்த இன்றைய முதல்வர், தற்போது அவர்களை கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் 11 ஆயிரம் பேருந்துகள் இயங்காமல் உள்ளது. பேருந்துகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. திமுக ஆட்சியில் விலையேற்றம் காரணமாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.

திமுக, கட்சியினரை பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை; குடும்பத்தை பாதுகாக்கவே ஆட்சி நடத்துகிறார்கள். திமுகவினரே இந்த ஆட்சியை விரும்பவில்லை. திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். முதல்வர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் சொல்வதை முதல்வர் கேட்பதில்லை. அரசு சொல்வதை மக்கள் கேட்கத் தயாராக இல்லை.

தேர்தல் எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிமுகவில் சண்டை ஏற்படும்போது திமுக உள்ளே புகுந்துவிடுவார்கள். மக்கள் ஏற்றுக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயராக இருந்து அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com