திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், ''திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால், அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில், ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். மாவட்ட செயலாளர் என்ற முறையில், திமுகவின் பல்வேறு மாநில மாநாடு, பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சியில் செல்வாக்கு மிக்கவராக கே.என்.நேரு திகழ்கிறார்.
அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. நேருவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

