"அண்ணாமலைக்கு எதற்கு இந்த பதற்றம், பயம்...?” முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சரமாரி கேள்வி

"அண்ணாமலைக்கு எதற்கு இந்த பதற்றம், பயம்...?” முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சரமாரி கேள்வி
"அண்ணாமலைக்கு எதற்கு இந்த பதற்றம், பயம்...?” முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சரமாரி கேள்வி

"அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அவருக்கு (அண்ணாமலை) கானல்நீராக தான் முடியும்" என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பாஜக நிர்வாகிகளை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் இணைப்பதாக கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் பாஜக இளைஞர் அணி சார்பில் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டது. மேலும் அந்நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பாஜக கூட்டணி இப்போதும் தொடர்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏன் பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அவரது செயல்பாடு விந்தையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. அண்ணாமலையை பிடிக்கவில்லை என்று அக்கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் வெளிப்படையாகக் கூறி கட்சியை விட்டு சென்றுள்ளனர். ஒரு கட்சியிலிருந்து விலகுவது - சேர்வதெல்லாம் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு. அந்தவகையில்தான் அதிமுகவிலிருந்து சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அந்தவகையில் தான் பாஜக ஐ.டி விங் தலைவராக இருந்தவரும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அவரை சேர்க்கவில்லை என்றால், அவர் திமுகவில் போய் சேர்ந்திருந்தால் அண்ணாமலை என்ன செய்திருப்பார்? எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியவர் அண்ணாமலை. ஆனால் இன்று திடீரென பதற்றம் அடைய வேண்டிய காரணமென்ன? இருவருக்கும் இடையே உள்ள ரகசியம் வெளிவந்து விடும் என்ற பதட்டமா? ’ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையாற்றும்’ என்று இப்போது பேசியுள்ளார் அண்ணாமலை. உண்மையில் அண்ணாமலை எதிர்வினையாற்ற வேண்டிய இடம் திமுக தான்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது 70 வது பிறந்தநாளில் பாஜகவுக்கு எதிராக உள்ள மற்ற மாநில தலைவர்கள் அழைத்து கூட்டம் நடத்தி உள்ளார். யார் பிரதமராக வரக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இதற்கெல்லாம் அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றியுள்ளார்? திமுக தான் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள். இதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்றி அதனை தடுக்க முடிந்தது? வாய் சொல்லில் வீரர் என்று பாரதியார் சொன்னது போல மீடியாவில் மட்டும் பேசினால் கட்சியை வளர்க்க முடியாது.

அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அவருக்கு கானல்நீராக தான் முடியும். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது பாஜக. கூட்டணியை முடிவு செய்வது அண்ணாமலை கிடையாது. எந்த முடிவையும் டெல்லியில் தான் எடுக்க முடியும். யாருடன் கூட்டணி சேர்ந்தால் நாம் கரைசேருவோம் என்று பாஜக தலைமைக்கு தெரியும். அண்ணாமலைக்கு எதற்கு இந்த பதற்றம், பயம் என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். கோவில்பட்டியில் சிலர் அரைவேக்கடுத்தனமான செயலை செய்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜகவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தக் கருத்தை அண்ணாமலை தான் முதலில் தெரிவித்து இருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அண்ணாமலை அரசியலில் இன்னும் பக்குவப்படவில்லை என்று அர்த்தம்” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com