முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடலுக்கு ஈபிஎஸ் - ஒபிஎஸ் அஞ்சலி
தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஆர்.முத்துக்குமாரசாமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென ராஜினாமா செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி ராஜினாமா செய்த பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.முத்துக்குமாரசாமி அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசு தலைமை வழக்கறிஞராக பதவியேற்றார்.
இந்நிலையில், இன்று முத்துகுமாரசாமி உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.