ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை இன்று திறக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக
தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கலச் சிலை, எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். ஜெயலலிதாவின் சிலை திறப்பு நிகழ்வையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் ஏராளமான தொண்டர்கள் திறன்டிருந்தனர். ஜெயலலிதாவின் சிலையை திறக்கும்போது அலுவலகம் சூழ சாலையில் நின்றிருந்த தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டனர். அதிமுக சின்னமான இரட்டை இலையை போல விரல் காட்டும் ஜெயலலிதாவின் சிலையை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர்.
ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது அம்மா' நாளிதழும் தொடங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்ற. ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நேற்று மாலையில் இருந்து அதிமுக அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.