சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை புதுக்குய்யனூா் பகுதியில் உள்ள 40 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்த சிறுத்தை மேலே ஏற முடியாமல் தவித்து வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இருந்து சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுத்தையைப் பிடிப்பதற்காக பிரத்யேக கூண்டு கொண்டுவரப்பட்டு கிணற்றில் வைத்தனா்.
இதைத்தொடா்ந்து கிணற்றில் வைக்கப்பட்ட கூண்டில் வெள்ளிக்கிழமை மாலை சிறுத்தை சிக்கியது. கிரேன் மூலம் கிணற்றிலிருந்து சிறுத்தை மீட்கப்பட்டு, பவானிசாகா் வனச் சரகம் தெங்குமரஹடா வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.