தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அசானி புயல், தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அசானி புயல் தீவிரமாக புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது மேலும் நகர்ந்து நாளை வட ஆந்திரா - ஒரிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிக்கலாம்: கேரளாவில் புதிதாக பரவும் தக்காளி காய்ச்சல்! 85 குழந்தைகள் பாதிப்பு