‘ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தரமான உணவு இல்லை’ - புகார்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கொரோனா தொற்று நோயாளிகள் 77 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் செய்தியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், மாத்திரை சாப்பிட வேண்டி இருப்பதால், உணவை கஷ்டப்பட்டு சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் நாராயண பாபுவிடம் கேட்டபோது, நோயாளிகளுக்கு நட்சத்திர உணவு விடுதியான ரேடிசன் ப்ளூவில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு தரப்படுவதாக தெரிவித்தார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை தான் மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சாப்பிடுகிறார்கள் என்றும், வீட்டில் கிடைக்கும் உணவு போல் இல்லை என்பதால் சிலர் புகார் தெரிவிப்பதாக நாராயண பாபு புதிய தலைமுறையிடம் விளக்கம் அளித்துள்ளார்.