விடிய விடிய பெய்த கனமழை: சாலைகளை சூழ்ந்துள்ள வெள்ளம் - தீவிர பணியில் மாநகராட்சி ஊழியர்கள்!
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மழைநீரால் வேலைக்குச் செல்வோர், நடைபயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். நடைபயணிகள் ஆபத்தான முறையில் கால்வாய் அருகே நடந்து செல்கின்றனர்.
பூந்தமல்லி டிரங்க் சாலை, பூந்தமல்லி பாரிவாக்கம் சாலை, ருக்மணி நகர், பெரியார் நகர், கரையான்சாவடி, குமரணன்சாவடி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. தொடர்ந்து மீண்டும் மழை பெய்யத் துவங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் லயோலா கல்லூரி முதல் கல்லூரி சாலைக்கு செல்லும் வழியில் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை முழுவதும் மழைநீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அதை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் மழையால் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்க வேண்டும் என்பவர்கள், 1913 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம்.