பூந்தமல்லி: மழை வெள்ளத்தில் மூழ்கிய அரசு கட்டடங்கள் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அடுத்த பூவிருந்தவல்லி ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம், ,நூலக கட்டடம் மறறும் கிராம சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. கனமழை காரணமாக இந்த அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒவ்வொரு கனமழைக்கும் இந்த பகுதியில் மழை வெள்ளம் சூழும் நிலையில், முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இங்குள்ள அரசு அலுவலகங்கள் மிகவும் தாழ்வான பகுதியில் செயல்பட்டு வருவதால் மழை வெள்ளம் தேங்கி பாதி முழ்கிய நிலையில் ஏரியின் நடுவில் கட்டப்பட்ட கட்டடங்கள் போல் காட்சியளிக்கின்றன.
மழை நின்றும் தேங்கிய மழை வெள்ளத்தை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை புகார் எழுந்துள்ளது. அரசு அலுவலகங்கள் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக கிராம நிர்வாக அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக திருமழிசையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.