இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரில் ஒருவர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பாம்பன் அருகே நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களைப் படகுடன் சிறை பிடித்தனர். பின்னர் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். இதில் ஒரு மீனவர், இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பாட்டிலை உடைத்து விழுங்கினார். இதைக் கண்டு மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடற்படையினர், அந்த மீனவரை இலங்கை திரிகோணமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் இலங்கை கடற்படையால் 26 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பாம்பன் பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி நாளை போராட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.