ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
செய்தியாளர்: ஸ்டாலின்
சட்டப்பேரவையில் கடந்த 2 ஆண்டுகளிலுமே ஆளுநர் உரை சர்ச்சையில்தான் முடிந்துள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத் தொடரில் ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை புறக்கணித்துவிட்டு தன்னுடைய கருத்துகளையும் சேர்த்து பேசினார்.
குறிப்பாக பெரியார் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்காதது ஆளும் தரப்பை ஆவேசப்படுத்தி ஆளுநருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அவர் முன்னிலையிலேயே வாசிக்க வழிவகுத்தது. அப்போது ஆளுநர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே அவையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலும் தமிழ்நாடு அரசு அளித்த உரையை வாசிப்பதை தவிர்த்த ஆளுநர் தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு, உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை தமிழில் வாசிக்கத் தொடங்கினார். மத்திய அரசை விமர்சித்தும் மாநில அரசை பாராட்டியும் இருந்த அந்த உரையை ஆளுநர் வாசித்ததாக கருதி அவைக்குறிப்பில் ஏற்றப்படுமென அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.
இந்த சூழலில்தான் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கூட்டத்தொடரில் ஆளுநர் பங்கேற்று உரையாற்ற நேரில் அழைப்பு விடுத்தார் சபாநாயகர்.
இந்தமுறை ஆளுநர் என்ன செய்வார் என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஃபெஞ்சல் புயல் நிவாரணத்தில் பாகுபாடு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் வழங்கப்படாதது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கட்சிகளின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளதால் அதுதொடர்பான பிரச்னை பெரியளவில் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது