முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு - உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த வரலாறு
முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கினை விசாரித்த வரலாற்று நிகழ்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
சர்வதேச மகளிர் தினம் வருகிற 8ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மகளிரை கவுரவிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட முழு அமர்வு ஒரு வழக்கை இன்று விசாரித்தது. தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டமானது தனியார் கல்வி நிலைய ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது குறித்து முடிவு செய்ய 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி ,இந்த வழக்குகளை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். இந்த முழு அமர்வில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளுமே பெண் நீதிபதிகள் என்பதால் இந்திய நீதித்துறையில் இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மகளிர் தினம் நெருங்கும் நேரத்தில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்தது சர்வதேச அளவிலான சரித்திர நிகழ்வாக அமைந்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், ‘கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா ?, இல்லையா ?’ என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா ? இல்லையா? என்பது மட்டுமல்லாமல் பல சட்டக் கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.